Peacock Story
===============================================
இங்கே உள்ளது சிறுவர் இலக்கிய எழுத்தாளர் திரு. கன்னிக்கோவில் ராஜா
Kannikovil Raja
அவர்களின் முகநூல் பதிவு, அதனை ஷேர் செய்ய நினைத்தேன், ஏனோ முடியவில்லை. திரு. கன்னிக்கோவில் இராஜா Kannikovil Raja
அவர்கள் பொறுத்தருள்க .============
கருத்தாளர்: திருமதி #பிரவீணா Praveena Ramarahthinam
சிறுவர் இலக்கிய எழுத்தாளர் திரு.கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய #ஓடும்முட்டை_துரத்தும்_மயில் அண்மையில் தி இந்து தமிழ் திசை - மாயாபஜாரில் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
என்ன ஒரு அழகான கதை! மயிலின் முட்டை ஓடுவதும் அதனை பிடிக்க காட்டின் "குடிமக்கள்" அனைவரும் மயிலுக்கு உதவ வருவதும், என்னதான் பிறர் உதவினாலும் நமது தேவையை நம்மால் மட்டுமே நிறைவேற்றிக்.கொள்ள முடியும் என்னும் உண்மையையும், உணர்த்தும் அழகான கதை.
முன்பும்,ஒரு நிகழ்வில், இக்கதையை கன்னிக்கோவில் இராஜா அவர்கள் சொல்லக் கேட்டது உண்டு.
உதவி என்பது என்ன? நாம் செய்ய வேண்டியவற்றை செய்யும் வழியை நமக்கு உரைப்பது. நமக்காக பிறர் பணியை செய்வது அல்ல என்ற ஆழமான கருத்தை அழகாக விளக்கும் கதை.
சிறுவர் இலக்கியம் என்பது வயதில் சிறியவர்களுக்கு மட்டும் அன்று. அனைவருக்கும் சிறுவர் இலக்கியத்தில் இடமுண்டு. ஏனென்றால் நாம் அனைவரும் ஒருகாலத்தில் சிறுவர் தாமே. அந்த விளையாட்டுகள் எப்போதும் நம்மை விட்டு அகல்வதில்லை. இந்த மயில் முட்டை கதை, எனக்கு ஒரு சங்க இலக்கியப் பாடலை நினைவூட்டியது. அதனை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் மேலிட, இதோ, என் விரல்கள் விரைகின்றன.
குறுந்தொகையில் ஒரு அழகான பாடல். தலைவியின் கண்கள் எப்போதும் கண்ணீரை வார்த்துக் கொண்டே இருக்கின்றன. அதைப் பார்த்த தோழி, காரணம் கேட்கிறாள். தலைவி உரைக்கும் விடைதான் இந்தப் பாடல்.( இந்த பாடலை முதன் முறை படிக்கும்.போது எனக்கும் உங்களைப் போலவே ஆர்வம் சுண்டியிழுத்தது)
ஒரு அழகான மயில்.அந்த மயில் முட்டையை ஒரு பாறையின் மேல் ஈன்று விட்டு எங்கோ சென்று விட்டது. அங்கே வெயிலில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு கருங்குரங்கின் குட்டி அந்த முட்டையை எடுத்து விளையாடுகிறது. அந்த குரங்கிற்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் முட்டையைக் காக்க வேண்டிய மயிலோ, எங்கேயோ, எதற்காகவோ சென்றுவிட்டது. இப்போது மயிலின் முட்டை உடையுமா, அல்லது மயிலின் வரவு அதனைக் காக்குமா? என்ன நடக்கப் போகிறது?
என்னங்க?! உங்க எல்லோருக்கும் சிறுபிள்ளைக் கதையை சொல்லுவது போன்ற உணர்வு வந்துவிட்டதா?
அந்த மயில்தான் தலைவன். முட்டைதான் காதல். குரங்குதான் ஊரார். பொருள் தேடச் சென்ற தலைவன், காதலை நினையாது, பொருள் தேடும் பொருட்டு வேறிடம் சென்றதால், இந்த காதல் பிழைக்குமோ முறியுமா என்று ஊரார் கையில் விளையாட்டுப் பொருளாய் காதல் ஆனதாம். அதாவது ஊரார் புரளி பேசி மகிழ்கிறார்களாம். ஆனால் காதலனின் பிரிவை தாள முடியாத தலைவியின் கண்கள் தானாகவே நீரை வார்த்துக் கொண்டே இருக்கிறது என்பது இந்த பாடலின் பொருள்.
இந்தப் பாடல் கூறும் சமூக நிலை, அதில் உள்ள எள்ளல், எல்லாவற்றையும் பாருங்கள். சங்க கால மக்கள், வேறுபட்ட வாழ்வை வாழவில்லை. நம்மைப் போலவேதான் வாழ்ந்திருக்கிறார்கள். கொஞ்சம் இயற்கையோடு இயைந்து என்று புரிகிறது அல்லவா.
இதோ, அந்த பாடல்.உங்களுக்காக.
மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.
_ #குறுந்தொகை .38. எழுதியவர்: #கபிலர்
இது போன்ற ஒரு அழகிய எழுத்து அனுபவத்தை தந்த மயில் முட்டைக்கு என் மனமார்ந்த நன்றிகள்! உங்களுக்கும் இந்த எழுத்து நல்ல அனுபவத்தை தந்திருக்கும் என்றே நம்புகிறேன்.
அன்புடன்,
பிரவீணா.
நீங்களும் கதையை வாசிக்க:
Comments
Post a Comment